இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களின் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் (EB) நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் மற்றும் தரமுயர்வுகள் தொடர்பில் நிவாரணம் வழங்குவது குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரால் அரச சேவை ஆணைக்குழுவிடம் (PSC) முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி வழங்கப்பட்டுள்ள முக்கிய சலுகைகள் மற்றும் தீர்மானங்கள் வருமாறு:
முந்தைய வினைத்திறன்காண் தடைத்தாண்டல் நிபந்தனையிலிருந்து விலக்களித்தல்: 2022.10.23 முதல் 2025.06.30 வரையான காலப்பகுதியில் இலங்கை ஆசிரியர் சேவையின் 1 ஆம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், முந்தைய தரத்திற்குரிய வினைத்திறன்காண் தடைத்தாண்டல் நிபந்தனையை பூர்த்தி செய்வதிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு தழுவல் அனுமதி (Covering approval) வழங்கப்பட்டுள்ளது. (எனினும், குறித்த வினைத்திறன்காண் தடைத்தாண்டலை அடுத்த பதவி உயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தும்.)
பரீட்சை நடைபெறும் திகதி வரையான காலப்பகுதிக்கு தரமுயர்வு வழங்குதல்: தற்போது மூன்று வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைகளும் வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளன. எனவே, 2025.06.30 ஆம் திகதிக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து குறித்த வர்த்தமானி பரீட்சைகள் நடைபெறும் திகதி வரை பதவி உயர்வுக்கு உரித்துடைய உத்தியோகத்தர்களுக்கும், தொகுதி (Module) அல்லது வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை முடிவுகளைக் கருத்திற் கொள்ளாது தரமுயர்வு வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன், இந்த வழிகாட்டல்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதம் அடுத்த வாரத்திற்குள் அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளது.
மேலதிக விளக்கங்களுக்கு வீடியோவைப் பார்க்க.
