5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் துன்புறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களைத் தண்டிப்பது அல்லது உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதியில், மாணவர்களின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அழுத்தம், தண்டனை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது வேறு எந்த நபர்களும் தண்டிப்பதையோ, அவமானப்படுத்துவதையோ அல்லது உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு சங்கடம், மன உளைச்சல் அல்லது அசௌகரியம் ஏற்படும் வகையில் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எந்தவொரு காரணத்திற்காகவும் சிறுவர்களைத் தண்டிப்பதற்கோ அல்லது அவர்களை அவமானப்படுத்துவதற்கோ பயன்படுத்த வேண்டாம் எனவும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
மாணவர்களின் பெறுபேறுகளை விட அவர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
